எருசலேமில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்களின் உயிர்ப்பு விழா செய்தி
மார்ச்,27,2013. இறை நம்பிக்கையும், நல்மனதும் கொண்ட மக்கள் அனைவரும், சிறப்பாக, அதிகாரத்தில்
உள்ள அனைவரும் நீதியையும் அமைதியையும் உலகில் நிலைநாட்ட உழைக்கவேண்டும் என்ற அழைப்புடன்
எருசலேமில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் உயிர்ப்பு விழாச் செய்தியை வெளியிட்டுள்ளனர். சிரியா,
லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி
வரும் அமைதியற்ற சூழல் முற்றிலும் நீங்க அனைத்துலகும் இணைந்து உழைக்கவேண்டும் என்று இச்செய்தியில்
கூறப்பட்டுள்ளது. நமது விசுவாசத்தின் தாய் வீட்டைப்போல் விளங்கும் புனித பூமியில்
திருப்பயணம் மேற்கொள்ள உலகின் அனைத்து நாட்டு மக்களையும் அழைக்கும் இச்செய்தியில், புனித
பூமிக்கு வர முடியாதவர்கள் தங்கள் செபங்கள் மூலம் இங்குள்ள கிறிஸ்தவர்களுடன் இணையவேண்டும்
என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள். புனித பூமியில் கிறிஸ்தவர்களின்
எண்ணிக்கை குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டும் இச்செய்தி, புனித பூமியில் உள்ள அனைத்து
கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தோரின் எண்ணிக்கையும் உயரவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ளது.