திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் புனித வார நிகழ்வுகள்
மார்ச்,25,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் புனித வார நிகழ்வுகளின்
விவரங்களை திருப்பீடம் இஞ்ஞாயிறு மாலை வெளியிட்டது. புனித வியாழன் காலை 9.30 மணிக்கு,
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை நிகழ்த்தும்
திருத்தந்தை, வியாழன் மாலை 5 மணியளவில் உரோம் நகரில் உள்ள வளர் இளம் கைதிகள் இல்லத்தில்
‘ஆண்டவரின் இறுதி இரவுணவுத் திருப்பலி’யை நிகழ்த்துவார். புனித வெள்ளியன்று மாலை 5
மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருச்சிலுவை வழிபாட்டை நிகழ்த்தும் திருத்தந்தை,
இரவு 9.15 மணிக்கு உரோம் நகரின் புகழ்பெற்ற Colosseum திடலில் நிகழும் சிலுவைப் பாதையைத்
தலைமையேற்று நடத்துவார். உயிர்ப்பு விழா திருவிழிப்புத் திருச்சடங்கையும், திருப்பலியையும்
புனித சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் நிறைவேற்றும் திருத்தந்தை, உயிர்ப்பு ஞாயிறன்று
காலை 10.15 மணிக்கு உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில்
நிறைவேற்றுவார். திருப்பலியைத் தொடர்ந்து, 'Urbi et Orbi' அதாவது, ஊருக்கும் உலகுக்கும்
என்ற உரையையும், சிறப்பு அப்போஸ்தலிக்க ஆசீரையும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய மேல்
மாடத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்குவார்.ஆதாரம்- வத்திக்கான வானொலி