கர்தினால் Boutros Raïலெபனான் நாட்டு இளையோருடன் இணைந்து உருவாக்கியுள்ள
சிலுவைப் பாதை
மார்ச்,25,2013. புனித வெள்ளியன்று இரவு 9 மணியளவில் உரோம் நகரின் Colosseum திடலில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் சிலுவைப் பாதையை அந்தியோக்கு மாரனைட்
வழிபாட்டு முறை முதுபெரும் தலைவர் கர்தினால் Bechara Boutros Raï அவர்கள், லெபனான் நாட்டு
இளையோர் இருவருடன் இணைந்து உருவாக்கியுள்ளார். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
அவர்கள் கர்தினால் Boutros Raï அவர்களுக்கு விடுத்திருந்த இந்த அழைப்பை ஏற்று, அவர் உருவாக்கிய
சிலுவைப் பாதை இத்திங்களன்று வத்திக்கான் நூலகத்தால் வெளியிடப்பட்டது. உலகில் நிலவும்
பிரிவினைகள், அநீதிகள், போர்கள் ஆகிய அனைத்து தீமைகளாலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இளையோரை
மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலுவைப் பாதையில், ஒவ்வொரு நிலையிலும் ஒரு
சமுதாயப் பிரச்சனை முன்வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இச்சிலுவைப் பாதை முயற்சியில்
பாரம்பரிய செபங்களே சொல்லப்பட்டு வந்த நிலையில், 1985ம் ஆண்டு முதல் முத்திப்பேறு பெற்ற
திருத்தந்தை 2ம் ஜான் பால் தனிப்பட்டவர்களையும், குழுவினரையும் சிலுவைப் பாதை சிந்தனைகளை
எழுதும்படி அழைப்பு விடுத்தார். 2005ம் ஆண்டு திருத்தந்தை 2ம் ஜான்பால் இறையடி சேர்வதற்கு
ஒரு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சிலுவைப் பாதைச் சிந்தனைகளை முன்னாள் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆதாரம்- வத்திக்கான வானொலி