திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு சபைத் தலைவருக்கு நன்றிக் கடிதம்
மார்ச்,23,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு
வாழ்த்துக் கடிதம் அனுப்பிய இயேசு சபையின் அகில உலகத் தலைவர் அருள்தந்தை Adolfo Nicolas
அவர்களுக்கு நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு சபையினர்
புனித இலொயோலா இஞ்ஞாசியாரின் போதனைகளின்படி, திருஅவைக்கும், கிறிஸ்துவின் பிரதிநிதிக்கும்
தொடர்ந்து, காலவரையறையின்றி பணிசெய்வதற்குத் தங்களையே முழுமையாக அர்ப்பணிப்பதாகவும்,
தனக்காகவும், தனது அப்போஸ்தலிக்கப் பணிக்காகவும் செபிப்பதாகவும் இயேசு சபை தலைவர் அளித்துள்ள
உறுதிக்கு நன்றி தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அதேசமயம், இயேசு சபையினர்
அனைவரும் தங்களது சபையின் புனிதர்களிடமிருந்து பெற்ற தனிவரத்துக்குப் பிரமாணிக்கமாக இருந்து
அவர்களின் பாதைகளில் தொடர்ந்து நடக்குமாறும், அதற்காகத் தான் செபிப்பதாகவும் கூறியுள்ளார்
திருத்தந்தை. அனைத்து இயேசு சபையினரும் தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ள திருத்தந்தை,
அனைத்து இயேசு சபையினருக்கும், இன்னும், அவர்களது பணியில் அவர்களுடன் ஒத்துழைப்பவர்கள்,
அவர்களது நற்பணியால் பலன்பெறுவோர், அவர்களது ஆன்மீகத்தில் பங்குபெறுவோர் ஆகியோருக்கும்
தனது சிறப்புப் பாசத்துடன் ஆசீர் அளிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். இதற்கிடையே, இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை Adolfo Nicolas அவர்கள், இம்மாதம்
17ம் தேதி ஞாயிறு மாலை, திருத்தந்தையைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.