2013-03-22 10:05:40

மார்ச் 23, 2013. கற்றனைத்தூறும்...... சர்க்கரை நோய்


நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகின்றன. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. குளுகோஸ் எனும் சர்க்கரைதான் நம் உடலுக்குக் கிடைக்கும் சக்தி. இது இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் இரத்தத்திலேயே தங்கி விடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால்தான் அது சர்க்கரை நோய்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம், அதிகப் பசி, மிக வேகமாக எடை குறைதல், அதிகமாகச் சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டுக் காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல், திரும்பத் திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் போன்றவை, சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறிகள் என்கின்றனர் வல்லுனர்கள்.
உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளர்கள் இருக்கிறார்கள். சர்க்கரை நோயால் உலகம் முழுவதிலும் 28 கோடியே 50 இலட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 5 கோடியே 8 இலட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்கு ஆகும். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
சர்க்கரை நோயில் இருபதுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் நான்கு வகையான நீரிழிவு நோயின் உட்பிரிவுகள், அதாவது முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாவது வகை சர்க்கரை நோய், கர்ப்ப கால சர்க்கரை நோய், கணையத்தில் ஏற்படும் கற்களால் ஏற்படும் சர்க்கரை நோய் என்கிற நான்கு வகையான சர்க்கரை நோய்கள் தான் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தவர்களில் 98 விழுக்காட்டினரை தாக்குவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1922ம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனெடிய அறிவியலாளர்கள்தான் இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக்க் கட்டுப்படுத்தலாம் என்று கண்டறிந்தனர். இன்சுலினைக் கண்டுபிடித்த பிரெடெரிக் பேண்டிங்கின் நினைவைப் போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
மனிதர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான காரணிகள் பெருமளவு வாழ்முறை சார்ந்தவையாக இருந்தாலும், மரபணுக் காரணிகளும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. தேவையில்லாத கவலைகள், நினைவுகள், மன அழுத்தம், நாக்கிற்கு அடிமையாதல் இவைகளாலும் சர்க்கரை நோய் வரும் என்கிறார்கள்.







All the contents on this site are copyrighted ©.