புனித வியாழனன்று இளம் கைதிகள் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "இறுதி
இரவுணவுத் திருப்பலி"
மார்ச்,21,2013. மார்ச் 28ம் தேதி, புனித வியாழனன்று மாலை 5 மணியளவில் உரோம் நகரில் உள்ள
இளம் கைதிகள் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் "இறுதி இரவுணவுத் திருப்பலியை"
நிறைவேற்றுவார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. புனித வியாழன்
காலையில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை
நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் இளம் கைதிகளின் பாதங்களைக் கழுவி,
அவர்களுக்குத் திருப்பலி நிகழ்த்துவார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Airesன்
பேராயராகப் பணியாற்றிய ஒவ்வோர் ஆண்டும், புனித வியாழன் திருப்பலிகளை மருத்துவமனைகள்,
சிறைகள், ஏழைகள் தங்கும் சேரிகள் ஆகிய இடங்களில் ஆற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் 2007ம் ஆண்டு, புனித யோசேப்பு அவர்களின் திருநாளுக்கு
முந்திய நாள் மார்ச் 18ம் தேதி இளம் கைதிகள் தங்கியிருந்த இதே சிறைக்குச் சென்று அங்குள்ள
சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தியுள்ளார்.