2013-03-21 15:06:37

Canterbury பேராயர் Justin Welby அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி


மார்ச்,21,2013. மேய்ப்புப்பணி என்பது இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருப்பது, அத்தகையப் பொறுப்பை ஏற்கும் தங்களுக்கு என் செபங்களை உறுதியளிக்கிறேன் என்ற வார்த்தைகள் அடங்கிய வாழ்த்துச் செய்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Canterbury பேராயர் Justin Welby அவர்களுக்கு இவ்வியாழனன்று அனுப்பி வைத்தார்.
மார்ச் 21, இவ்வியாழனன்று Canterbury பேராயராகவும், இங்கிலாந்து கிறிஸ்தவ சபையின் தலைவராகவும் பொறுப்பேற்கும் ஆங்கலிக்கன் பேராயர் Welby அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
மார்ச் 13ம் தேதி தான் திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டபோது தனக்கு பேராயர் Welby அனுப்பிய வாழ்த்துக்களுக்கு நன்றிபகர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், தொடர்ந்து தனக்காகச் செபிக்கும்படியும் இச்செய்தியில் கூறியுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையிலும், ஆங்கலிக்கன் சபையிலும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இடையே இதுவரை நிலவி வந்த நல்லுறவு வளர வேண்டும் என்றும், விரைவில் பேராயர் Welby அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை, தான் எதிர்நோக்கியிருப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.