2013-03-20 16:06:47

இத்தாலிய ஆயர் பேரவையின் உயர்மட்டக் குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ளச் செய்தி


மார்ச்,20,2013. எங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்த எம் சகோதர கர்தினால்கள் உலகின் எல்லையிலிருந்து தங்களைத் தேர்ந்துள்ளனர் என்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது என்று இத்தாலிய ஆயர் பேரவையின் உயர்மட்டக் குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
இலத்தீன் அமெரிக்கக் கண்டம் நம்பிக்கை தரும் ஒரு கண்டம் என்று 2007ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் கூட்டத்தில் பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ள இத்தாலிய ஆயர்கள், அந்த நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தற்போது நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே, ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 3ம் தேதி முடிய மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola தலைமையில், மிலான் உயர்மறைமாவட்டத்திலிருந்து 10,000 பேர் உரோம் நகர் வந்து திருத்தந்தையைச் சந்திப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயணத்தில் கலந்துகொள்ளும் 10,000 பேரில், 6,000 பேர் 14 வயதுக்குட்பட்ட இளையோர் என்றும், இவர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் கர்தினால் Scola திருப்பலி நிகழ்த்துவார் என்றும், திருப்பயணிகள் அனைவரையும் ஏப்ரல் 3ம் தேதி பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.