திருத்தந்தை பிரான்சிஸ் : சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து இல்லாத திருஅவை வருந்ததக்க நிறுவனமாக
இருக்கும்
மார்ச்,15,2013. கான்கிளேவ் அவையில் தன்னுடன் கலந்து கொண்ட 114 கர்தினால்களுடன் சேர்ந்து
சிஸ்டின் சிற்றாலயத்தில் இவ்வியாழன் மாலை 5 மணிக்குத் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றினார்
திருத்தந்தை பிரான்சிஸ். ஆயர்கள், குருக்கள், கர்தினால்கள், திருத்தந்தையர் உட்பட
ஒவ்வொரு விசுவாசியும் உண்மையான கிறிஸ்தவராக இருப்பதற்கு சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை
அறிவிக்க வேண்டுமென்று இம்மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை
பிரான்சிஸ், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆற்றிய இந்த முதல் மறையுரையில்,
திருச்சிலுவையின்றி நம் ஆண்டவரின் சீடர்களாக நாம் ஒருபோதும் இருக்க முடியாது என்பதை வலியுறுத்திக்
கூறினார். நாம் விரும்பும் அளவுக்கு நடக்கலாம், பலவற்றைக் கட்டியெழுப்பலாம், ஆனால்
நாம் இயேசு கிறிஸ்துவை அறிவிக்காவிட்டால், நாம் வருந்ததக்க, அரசு-சாரா பிறரன்பு நிறுவனமாக
இருப்போம், கிறிஸ்துவின் மணமகளான திருஅவையாக இருக்கமாட்டோம் என்றும் திருத்தந்தை கூறினார். ஆண்டவரிடம்
யார் செபிக்கவில்லையோ அவர் சாத்தானிடம் செபிக்கிறார் என்று Léon Bloy என்பவர் கூறியது
எனது நினைவுக்கு வருகின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நாம் இயேசு கிறிஸ்துவை
அறிவிக்கவில்லையென்றால், கடவுளற்ற உலகப்போக்கான, சாத்தானின் உலகை அறிக்கையிடுகிறோம் என்று
கூறினார்.