2013-03-14 16:58:36

புதியத் திருத்தந்தைக்கு இயேசு சபையின் அகில உலகத் தலைவர் வாழ்த்து


மார்ச்,14,2013. இயேசு சபையைச் சேர்ந்த கர்தினால் Jorge Mario Bergoglio அவர்கள், திருஅவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதற்காக, அனைத்துலக இயேசு சபையின் சார்பில் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்று அகில உலக இயேசு சபையின் தலைவர் Adolfo Nicolás செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருஅவை தற்போது கடந்து கொண்டிருக்கும் கடினமான பயணத்தின்போது, அதனை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள எங்கள் சகோதரரின் தாராள மனதை நாங்கள் பாராட்டுவதோடு, அவருடன் இந்தப் பயணத்தில் உடனிருப்போம் என்றும் அருள்பணியாளர் Nicolás கூறினார்.
இறைமக்கள் அனைவரின் முன்னிலையில் திருத்தந்தையாக அவர் தோன்றிய கணமே அவரது எளிமையும், தாழ்ச்சியும், ஆன்மீக ஆழமும் புலனானது என்று கூறிய அருள்பணியாளர் Nicolás, அவர் 'பிரான்சிஸ்' என்ற பெயரைத் தெரிவு செய்தது, வறியோருடன் அவர் கொண்டுள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தியது என்று சுட்டிக்காட்டினார்.திருத்தந்தைக்குச் சிறப்பான முறையில் பணிந்து அவர் பணிகளை மேற்கொள்வதே இயேசு சபையினரின் சிறப்பான அழைப்பு என்பதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள இயேசு சபைத் தலைவர் Adolfo Nicolás, புதியத் திருத்தந்தையின் கீழ் மீண்டும் எங்கள் சபையினர் அனைவரின் பணிவையும் தெரிவிக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.