மார்ச்,14,2013. உலகனைத்திலும் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களின் தலைவராகத் தாங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டிருப்பதற்கு,
Argentina அரசு மற்றும் மக்களின் சார்பில் என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்
தெரிவித்துக் கொள்கிறேன் என்று Argentina அரசுத் தலைவர் Cristina Fernandez de Kirchner,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார். புதியத் திருத்தந்தை
அறிவிக்கப்பட்ட 90 நிமிடங்களில் வத்திக்கானை அடைந்த இந்தத் தந்தியில், நீதி, சமத்துவம்,
அமைதி ஆகிய வழிகளில் உலகமனைத்தையும் வழிநடத்த திருத்தந்தைக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களைத்
தெரிவித்துள்ளார் அரசுத் தலைவர் Kirchner. அமெரிக்க மக்கள் சார்பாகவும், தன் குடும்பத்தின்
சார்பாகவும் புதியத் திருத்தந்தைக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அமெரிக்க அரசுத்தலைவர்
பாரக் ஒபாமா செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். உலக அமைதி, பாதுகாப்பு, மனித மாண்பு ஆகியவற்றை
நிலைநாட்ட, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் தான் உழைத்ததைக் குறிப்பிட்டுள்ள
ஒபாமா, புதியத் திருத்தந்தையின் பணிகாலத்திலும் இந்த முயற்சிகள் தொடரவேண்டும் என்று அழைப்பு
விடுத்துள்ளார். துணை அரசுத் தலைவர் Joe Biden, மார்ச் 19ம் தேதி நடைபெறவிருக்கும்
திருத்தந்தை பணி ஏற்பு விழாவிற்கு, அமெரிக்க அரசின் சார்பில் இன்னும் பல தலைவர்களுடன்
வரவிருப்பதாக அறிவித்துள்ளார்.