பேராயர் மரினி : அகிலத் திருஅவையும் செபத்தில் கான்கிளேவ் அவையோடு ஒன்றித்திருக்க அழைப்பு
மார்ச்12,2013. சிஸ்டின் சிற்றாலயத்தில் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் 115
கர்தினால்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தாலும், அகிலத் திருஅவையும் செபம் மற்றும் எதிர்பார்ப்புடன்
அக்கர்தினால்களுடன் இணைந்துள்ளது என்று, அனைத்துலக திருநற்கருணை மாநாடுகளுக்கானத் திருப்பீடக்
குழுவின் தலைவர் பேராயர் பியரோ மரினி கூறினார். இச்செவ்வாய் மாலை தொடங்கிய கான்கிளேவ்
அவைக்கான செபங்கள் மற்றும் திருப்பலிகளுக்கு உதவியவரும், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை
2ம் ஜான் பால் அவர்கள் நிகழ்த்திய திருவழிபாடுகளுக்குப் பொறுப்பானவருமான பேராயர் மரினி,
கான்கிளேவ் அவைக்காக அனைவரும் செபிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கான்கிளேவ்
நிகழ்வு, அதில் கலந்து கொள்ளும் குறிப்பிட்ட கர்தினால்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல,
ஆனால், அது, ஒரு திருஅவை நிகழ்வாகும், அனைத்துக் கத்தோலிக்கரும் ஆன்மீகமுறையில் சிஸ்டின்
சிற்றாலயத்தில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்படுகின்றார்கள் என்றும் பேராயர் மரினி கூறினார்.