2013-03-11 15:40:57

பாகிஸ்தானில் கிறிஸ்தவ வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன


மார்ச்,11, 2013. தேவநிந்தனை குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வீடுகள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது குறித்து, தன் வன்மையான கண்டனத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்திய ஆயர்கள் பேரவை.
இத்தகைய வன்செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதுடன், அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய பாகிஸ்தான் அரசின் கடமையையும் வலியுறுத்தியுள்ளனர் இந்திய ஆயர்கள்.
தேவநிந்தனை என்ற பொய்க்குற்றச்சாட்டின் பேரில் தீவிரவாதக் குழுக்கள் கிறிஸ்தவர்களைத் தாக்குவதும் அவர்களின் உடமைகளைச் சேதப்படுத்துவதும் பாகிஸ்தானில் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாகக் கூறும் இந்திய ஆயர்கள், பாகிஸ்தான் அரசு இதில் நியாயமான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, சனிக்கிழமையன்று லாகூரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 178 வீடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில்,. இத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த காவல்துறை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என மனித உரிமைகளுக்காக உழைக்கும் இஸ்லாமிய நடவடிக்கையாளர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.