வாக்குகள் எண்ணப்பட்டுவரும் இந்நேரத்தில் மக்கள் அமைதி காக்குமாறு கென்ய ஆயர்கள் வேண்டுகோள்
மார்ச்,09,2013. கென்யாவில் இம்மாதம் 4ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தல்களின் வாக்குகள்
எண்ணப்பட்டுவரும் இந்நேரத்தில் நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர். தொழில்நுட்பப் பிரச்சனையால் வாக்குகள் எண்ணப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதையொட்டி
அறிக்கை வெளியிட்டுள்ள கென்ய ஆயர்கள், தேர்தல் வன்முறை தொடர்பாக 6 காவல்துறை அதிகாரிகள்
உட்பட 14 பேர் உயிரிழந்தது குறித்த தங்களது வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். தேர்தல்
தொடர்பாக வன்முறைகள் இடம்பெற்றுள்ளபோதிலும், கென்ய மக்கள் தங்களது பணிகளுக்குத் திரும்பி
நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிக்குத் தங்களை அர்பணிக்குமாறும் கென்ய ஆயர்கள், குடிமக்களைக்
கேட்டுள்ளனர். கென்யாவில், 2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் தொடங்கிய
வன்முறைகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.