அரசுத் தலைவர் Hugo Chavez அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக உரோம் நகரில்
திருப்பலி நடைபெறும் - கர்தினால் Savino
மார்ச்,06,2013. இச்செவ்வாயன்று மரணமடைந்த Venezuela நாட்டின் அரசுத் தலைவர் Hugo Rafael
Chavez Frias அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக உரோம் நகரில் தான் திருப்பலி நிறைவேற்றவிருப்பதாக
Caracas பேராயர் கர்தினால் Jorge Urosa Savino தெரிவித்துள்ளார். புதியத் திருத்தந்தையைத்
தேர்ந்தெடுக்கும் நோக்கத்தில் வத்திகானுக்கு வந்திருக்கும் கர்தினால் Savino, தற்போது
உரோம் நகரை விட்டுச் செல்லமுடியாத நிலையில், மறைந்த அரசுத் தலைவர் Chavez அடக்கச் சடங்கில்
பங்கேற்க இயலாத காரணத்தால், உரோம் நகரில் திருப்பலி நிறைவேற்றும் எண்ணத்தை வெளியிட்டுள்ளார். அரசுத்
தலைவர் Chavezன் மரணத்தையொட்டி, அவரது குடும்பத்தினருக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவித்துள்ள கர்தினால் Savino, தற்போது அரசுப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் நாட்டில்
அமைதியும், ஒழுங்கு முறையும் நிலவுவதை உறுதி செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த
14 ஆண்டுகள் Venezuela நாட்டின் அரசுத் தலைவராகப் பணியாற்றிய 58 வயதான Chavezன் மரணத்தையொட்டி
உலகத் தலைவர்கள் பலரும் தங்கள் அனுதாபங்களையும் எண்ணங்களையும் வெளியிட்டுள்ளனர். கடந்த
இரு ஆண்டுகளாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரசுத் தலைவர் Chavezன் மறைவையொட்டி செய்தி
அனுப்பிய ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், கம்யுனிச இரஷ்ய கூட்டமைப்பு கலைந்தபின், சோஷலிஸ
எண்ணங்களைத் தொடர்ந்து உலகில் வளர்த்தவர்களில் மறைந்த Chavez அவர்களும் ஒருவர் என்று
கூறினார்.