2013-03-05 15:32:12

கான்கிளேவ் அவைக்காக வத்திக்கான் பசிலிக்காவில் செபம்


மார்ச்,05,2013. புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை கூடும் தேதியைக் குறிப்பதற்கு இன்னும் ஐந்து கர்தினால்கள் உரோமைக்கு வந்துசேரவேண்டியிருக்கிறது என, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இச்செவ்வாய் உரோம் நேரம் பிற்பகல் ஒரு மணியளவில் நிருபர் கூட்டத்தில் இதனை அறிவித்த அருள்தந்தை லொம்பார்தி, கான்கிளேவ் அவையில் கலந்து கொள்ளும் 115 கர்தினால்களுள் 110 பேர் இச்செவ்வாய் காலை பொது அமர்வில் கலந்து கொண்டனர் எனத் தெரிவித்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் திறமையான திருப்பணிக்கும், ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் அவரது அயராத உழைப்புக்கும் நன்றி சொல்லி, கர்தினால்கள் அனைவரும் கையொப்பமிட்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குத் தந்திச் செய்தி ஒன்றும் இச்செவ்வாயன்று அனுப்பப்பட்டுள்ளது என அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
மேலும், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவைக்காக இப்புதன் மாலை 5 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கர்தினால்கள் அனைவரும் செபிக்கவுள்ளனர். இதில் அனைத்து விசுவாசிகளும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர் என அருள்தந்தை லொம்பார்தி நிருபர் கூட்டத்தில் அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.