மார்ச்,04,2013. யானைகளும், காண்டாமிருகங்களும் முற்றாக அழிக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ள நிலையில், உலக அளவில், சட்டவிரோத வனவிலங்கு வணிகம் குறித்து கடுமையான நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைவர் கூறியுள்ளார். பல
பில்லியன் டாலர்கள் விலைமதிப்பு பெறும் குற்ற வணிகமாக இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இதனால்,
யானைகளும், காண்டாமிருகங்களும் முற்றாக அழிக்கப்படுவதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்தில் நடக்கும் ''அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான
நிறுவனத்தின்'' சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் இவ்வேண்டுகோளை விடுத்தார் ஐ.நா.வின்
சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைவர் அச்சிம் ஸ்டீய்னர். ஆசியாவில் தேவை அதிகரித்திருப்பதன்
காரணமாக யானைத் தந்தம் மற்றும் காண்டாமிருகக் கொம்புகளுக்கான வேட்டை கடந்த பல ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். சுறா மீன்கள் மற்றும் நூற்றுக்கணக்கான
தாவர இனங்களைக் காப்பாற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இம்மாநாடு கவனம் செலுத்தியுள்ளது. இதற்கிடையே,
ஆண்டுதோறும் 10 கோடி சுறா மீன்கள் கொல்லப்பட்டுவருவதாக இது குறித்த மிகவும் துல்லியமான
கணிப்பு என்று கருதப்படும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.