அமெரிக்கக் கர்தினால்கள் : அடுத்த திருத்தந்தை ஆழ்ந்த விசுவாச மனிதராக இருக்க வேண்டும்
மார்ச் 02,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குப்பின் தேர்ந்தெடுக்கப்படும்
திருத்தந்தை, ஆழமான விசுவாசம் கொண்ட மனிதராக, நற்செய்தியை வழங்கவல்ல புனித மனிதராக இருக்க
வேண்டும் என, அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கர்தினால்கள் கருத்து தெரிவித்தனர். அமெரிக்க
ஐக்கிய நாட்டிலும், உலகமெங்கிலும் விசுவாசிகள் அடுத்த திருத்தந்தைக்காகச் செபித்துவரும்
இவ்வேளையில், திருஅவையை நடத்துவதற்கு மிகச் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு கர்தினால்களாகிய
எங்களை ஆவியானவர் வழிநடத்த வேண்டுமெனவும் அமெரிக்க கர்தினால்கள் கூறினர். வயது, நாடு
என்ற பாகுபாடின்றி பாப்பிறைப் பதவிக்குத் தகுதியான ஒருவரையேத் தேர்ந்தெடுக்க வேண்டும்,
அவர், விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்பட்டு அதை மற்றவர்களுக்கு வழங்குபவராக இருக்க வேண்டும்
என, சிகாகோ கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் கூறினார். மேலும், புனிதமான ஒருவரை, விசுவாசத்தில்
ஆழ்ந்துள்ள ஒருவரை, நம் மக்கள் விரும்புகின்றனர் என்று Boston கர்தினால் Sean Patrick
O’Malley கூறினார்.