2013-03-01 16:24:36

காஸ்தெல் கந்தோல்ஃபோவில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


மார்ச்01,2013. கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து இவ்வியாழன் இரவு 8 மணிக்குப் பதவி விலகிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழன் இரவு நன்றாகத் தூங்கினார் என்றும், இந்தப் பணி ஓய்வு காலத்தில் இரவில் இத்தாலியத் தொலைக்காட்சியில் செய்தி ஒலிபரப்பாகும் நேரத்தில் பியானோ இசைக்கருவியை இசைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவரின் செயலர் பேராயர் Georg Ganswein கூறினார்.
இத்தகவலை இவ்வெள்ளி நிருபர் கூட்டத்தில் தெரிவித்த திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, பேராயர் Ganswein மூலம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் குறித்த செய்திகளை அறிந்ததாகக் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது நலன்விரும்பும் மக்கள் தனக்கு அனுப்பியுள்ள செய்திகளை வாசிக்கத் தொடங்கியிருப்பதாகவும், இவ்வெள்ளி காலை 7 மணிக்குத் திருப்பலியை நிகழ்த்தினார் எனவும், மாலை 4 மணியளவில் சிறிது நேரம் நடப்பார் எனவும், அந்நேரத்தில் செபமாலை சொல்வார் என்றும் நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார் அருள்பணி Rosica.
இறையியல், ஆன்மீகம், வரலாறு ஆகிய துறைகள் சார்ந்த நூல்கள் மற்றும்பிற பொருள்களையும் அவர் தன்னோடு எடுத்துச் சென்றுள்ளார் எனவும் அருள்பணி Rosica கூறினார்.








All the contents on this site are copyrighted ©.