ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை இழந்து, நாட்டை விட்டு
வெளியேறுகின்றனர் - கல்தேய ரீதி கத்தோலிக்கத் தலைவர்
பிப்.27,2013. ஈராக் நாட்டில் நிலவி வரும் நிலையற்ற அரசியல் சூழல், அடிப்படைவாதம் ஆகிய
காரணங்களால் அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை இழந்து, நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்
என்று கல்தேய ரீதி கத்தோலிக்கத் தலைவர் கூறியுள்ளார். சனவரி மாதம் 31ம் தேதி, திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்களின் ஒப்புதலோடு கல்தேய ரீதி கத்தோலிக்கத் தலைமைப் பொறுப்புக்குத்
தெரிவு செய்யப்பட்ட முதுபெரும் தலைவர் முதலாம் Raphael Sako, ஈராக்கில் கிறிஸ்தவர்களின்
எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார். 1987ம் ஆண்டு 14
இலட்சத்திற்கும் அதிகமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2 இலட்சத்து 50,000க்கும்
குறைந்து காணப்படுகிறது. கடந்த மாதம் Kirkuk மற்றும் Tuz Khurmatu ஆகிய இடங்களில்
நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 200க்கும் அதிகமானோர்
காயமுற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய முதுபெரும் தலைவர் Sako, கிறிஸ்தவர்கள்
மட்டுமல்லாமல், ஏனைய சிறுபான்மை இனத்தவரும் பாதுகாப்பின்றி வாழ்ந்துவரும் நிலையை எடுத்துரைத்தார். ஈராக்கில்
வாழும் இஸ்லாமியருக்கும் ஏனைய மதத்தவருக்கும், இனத்தவருக்கும் இடையே பாலமாகச் செயல்பட
வேண்டியது கிறிஸ்தவர்களே என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியதை முதுபெரும் தலைவர்
Sako சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.