ஐ.நா. மனித உரிமைகள் அவை இலங்கையில் விசாரணைகளை முடுக்கிவிட வேண்டும், Human Rights Watch
பிப்.26,2013. இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து
விசாரிப்பதற்கு தனித்தியங்கும் அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றுக்கு ஐ.நா. மனித உரிமைகள்
அவை தனது இவ்வாண்டு கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என்று Human Rights Watch என்ற மனித
உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது. 2012ம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில்,
இலங்கை அரசு போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதிலும்,
அவ்வரசு எவ்விதக் குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுக்கவில்லையென்று, Human Rights Watch
கழகம், ஐ.நா. மனித உரிமைகள் அவை உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது. இலங்கையின்
இறுதிக்கட்டப் போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்கும் மனித உரிமை ஆர்வலர்களை
இலங்கை அரசு கடந்த ஓராண்டளவாக அச்சுறுத்தி வருகிறது என்றுரைக்கும் அக்கடிதம், போர்க்குற்றங்களை
விசாரிப்பதற்கு அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றுக்கு ஐ.நா. மனித உரிமைகள் அவை அனுமதிக்க
வேண்டும் எனக் கேட்டுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் அப்பாவி குடிமக்கள்
இறந்தனர் என்றும் Human Rights Watch கழகம் கூறியுள்ளது.