கேயாஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்குப் “பெரும் பாழ்” என்பதுதான் முதலில் அதன் அர்த்தமாக
இருந்தது. 1975ம் ஆண்டில் கணிதமேதை ஜேம்ஸ் யார்க் என்பவர் இந்தச் சொல்லை முதலில் பயன்படுத்தியபோது,
ஒழுங்கான, ஒழுங்கற்றதன்மைதான் கேயாஸ் என்று சொன்னார். கேயாஸ் தியரி என்பது, ஒழுங்கற்றது
போலிருக்கும் விடயங்களில் ஒழுங்கைத் தேடும் செயலாகும். 1969ம் ஆண்டில் வானிலை ஆராய்ச்சியாளர்
எட்வர்ட் லாரன்ஸ் என்பவர், பருவ மாற்றங்களை கணணியில் அமைத்தார். கேயாஸ் தியரி இங்குதான்
தொடங்கியது என்று சொல்கிறார்கள். வானிலை ஒருநாளைப் போல் இருக்காது என்றாலும், ஆண்டு முழுவதும்
பார்க்கும்போது, மழையோ, புயலோ, காற்றோ வருவதில் ஒருவிதமான ஒழுங்கு இருக்கின்றது. ஐப்பசி
மாதத்தில் மழை. சித்திரை மாதத்தில் வெயில். மார்கழி மாதத்தில் குளிர். எனவே அன்றாட வானிலையைச்
சரியாகக் கணிக்க முடியவில்லையெனினும், வானிலை ஒழுங்கற்ற ஒழுங்கில்தான் இயங்குகிறது. மனிதர்களின்
வாழ்விலும் திருப்புமுனை நிகழ்வுகள் கேயாஸ் தியரிப்படிதான் நடக்கின்றன. அன்று ஆட்டோ பிடிக்காமல்
பேருந்தில் சென்றிருந்தால் உங்களுக்கு இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்குமா? அன்று அந்தத்
தொலைபேசி அழைப்பு வராமலிருந்திருந்தால்.... அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டிருந்தால்...
அதற்குப் பதில் போடாமல் இருந்திருந்தால்.... அந்த வார்த்தையை வாய் தவறிச் சொல்லாமல் இருந்திருந்தால்....
இவை போன்ற தற்செயலான விடயங்களின் நீண்டநாள் விளைவுகள் அனைத்தும் கேயாஸ்தான். (நன்றி
எழுத்தாளர் சுஜாதா)