பல்வேறு சவால்கள் திருஅவை முன் உள்ளன என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்
பிப்.23,2013. திருத்தந்தை பதவி விலகும் இந்த வாரமும் அதைத்தொடர்ந்து அடுத்த திருத்தந்தை
தேர்ந்தெடுக்கப்படும்வரை உள்ள காலமும் மிகவும் சவால் நிறைந்த காலங்களாக இருக்கும் என்று
கூறினார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி. எதிர்பார்ப்புகளுடனும்
தயாரிப்புகளுடனும் இக்காலத்தில் வாழ்ந்துவரும் திருஅவை, அதன் இயல்புக்கு ஒத்திணங்கிச்
செல்லாத பல நிர்ப்பந்தங்களையும், கருத்துக்களையும் எதிர்நோக்கவேண்டியுள்ளது என்ற திருப்பீடப்பேச்சாளர்,
திருஅவையையும் அதன் நிர்வாகத்தையும் குழப்ப, சில சமூகத்தொடர்பு சாதனங்கள் வழி, சிலரால்
அவதூறான செய்திகள் பரப்ப்ப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார். திருஅவை அதிகாரிகள் குறித்து
சிலர் தவறான கருத்துக்களைப் பரப்பிவருவது குறித்த கவலையையும் வெளியிட்டார் அருட்தந்தை
லொம்பார்தி. விசுவாசிகள் திருஅவை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் அன்பையும் சிலரின்
அவதூறான பிரச்சாரங்கள் எவ்வகையிலும் பாதிக்காது என மேலும் கூறிய திருப்பீடப்பேச்சாளர்,
தன் வாழ்நாளின் இறுதி நாட்களை செபத்திற்கென அர்ப்பணிக்க திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டிருக்கும்
விருப்பத்தையும் சுட்டிக்காட்டினார்.