பன்னாட்டுப் பத்திரிக்கையாளர்களுக்கு வத்திக்கானுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பான
சுற்றுலா
பிப்.22,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பிப்ரவரி 11ம் தேதி தெரிவித்த முடிவையடுத்து,
தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக, உலக மக்களுக்கு செய்திகளை வழங்கிவரும் பன்னாட்டுப்
பத்திரிக்கையாளர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கு திருப்பீட பத்திரிகை அலுவலகமும், சமூகத்
தொடர்பு அவையும் இணைந்து வத்திக்கானுக்குள் ஒரு சிறப்பான சுற்றுலாவை இப்புதனன்று ஏற்பாடு
செய்திருந்தது. புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் தங்கவிருக்கும்
புனித மார்த்தா இல்லத்தையும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் மறைந்த வாழ்வைத் துவங்கவிருக்கும்
திருஅவையின் அன்னை மரியா துறவு மடத்தையும் பத்திரிக்கையாளர்கள் பார்வையிட்டனர். Conclave
கர்தினால்கள் அவை நடைபெறும் Sistine சிற்றாலயத்திற்கு அருகே அமைந்துள்ள புனித மார்த்தா
இல்லம், திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் பதவியில் இருந்தபோது கட்டப்பட்டது. இந்த
இல்லத்தைச் சுற்றி மின்காந்த பாதுகாப்பு வளையம் அமைந்துள்ளது. Conclave அவை நடைபெறும்
நேரத்தில் கர்தினால்களுக்கும் வெளி உலகிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கும்வண்ணம்
இந்தப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்குப்
பின்புறம் உள்ள அமைதியான ஒரு பூங்காவில் அமைந்துள்ள வத்திக்கான் வானொலியின் முக்கிய அலுவலகத்தின்
அருகில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தங்கப்போகும் துறவு மடம் அமைந்துள்ளது.