காரித்தாஸ் பணிகளுக்கு இஸ்பானிய ஆயர்கள் பேரவை வழங்கியுள்ள 60 இலட்சம் யூரோக்கள்
பிப்.22,2013. கடந்த ஆண்டு காரித்தாஸ் பணிகளுக்கு 60 இலட்சம் யூரோக்கள், அதாவது, 43 கோடியே
20 இலட்சம் ரூபாய், அளித்துள்ளதாக இஸ்பானிய ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது. 2007ம்
ஆண்டிலிருந்து இஸ்பானிய அரசியல் சட்டத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தினால், வரிப்பணம் செலுத்துவோர்
கோவில்களுக்கென தங்கள் வருமானத்தைச் செலுத்தும் புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
அவ்வாண்டிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, கோவிலுக்கென தாராளமாக வழங்குவோர் எண்ணிக்கை
பத்து இலட்சமாக அதிகரித்துள்ளது என்று ஆயர்கள் பேரவை கூறியுள்ளது. ஸ்பெயின் நாட்டில்
உள்ள 68 மறைமாவட்டங்களில், ஏறத்தாழ 6000 பங்குகள் உள்ளன. இவற்றில் காரித்தாஸ் பணிகளுக்கென
65000க்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் உழைக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அண்மையப்
பொருளாதாரச் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு உதவிகள வழங்குவதில் காரித்தாஸ்
அமைப்பு தீவிரமாக பணிகள் செய்து வருகிறது என்றும் இஸ்பானிய ஆயர்கள் பேரவை கூறியுள்ளது.