2013-02-20 15:45:48

திருத்தந்தையின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஊடகங்களில் கர்தினால்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்


பிப்.20,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முடிவைக் கேட்டு நான் கலங்கியபோதிலும், இந்த முடிவை அறிவித்ததன் வழியாக அவர் திருஅவை மீது கொண்டிருக்கும் ஆழமான அன்பையும், அவரது பணிவையும் அறிந்து உள்ளூர மகிழ்வடைகிறேன் என்று கர்தினால் Julián Herranz கூறினார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக பிப்ரவரி 11, கடந்த திங்களன்று திருத்தந்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கர்தினால்கள் பலரும் பல்வேறு ஊடகங்களில் தெரிவித்துள்ள கருத்துக்களைத் தொகுத்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano இச்செவ்வாயன்று கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.
தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஒருவர் அறிவிப்பது உலக அரங்கிலும், திருஅவை வரலாற்றிலும் மிக, மிக அரிதாக நிகழும் ஒரு நிகழ்ச்சி என்பதைச் சுட்டிக் காட்டினார் கர்தினால் Herranz.
உலக மக்களின் பார்வையிலிருந்து விலகி, தன் வாழ்வை மறைவாகவும், செபத்திலும் கழிக்க விரும்புவதாக திருத்தந்தை அறிவித்திருப்பது அவரது ஆன்மீக வாழ்வின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது என்று கர்தினால் Jean-Louis Tauran கூறியுள்ளார்.
திருத்தந்தையின் அறிவிப்பு ஆழ்ந்த வருத்தத்தை உருவாக்கினாலும், "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே... என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்று இயேசு கூறியுள்ள வார்த்தைகளின் பொருளை உணர்ந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக இருந்தது என்று கர்தினால் Angelo Comastri கூறியுள்ளார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பு வெறும் அலங்காரப் பொருள் அல்ல, மாறாக, அது ஒருவரது முழு சக்தியையும் ஈடுபடுத்தவேண்டிய ஒரு பணி என்பதை திருத்தந்தையின் இந்த முடிவு சுட்டிக்காட்டுகிறது என்று வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald Wuerl, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.