திருத்தந்தை எடுத்துள்ள முடிவு திருஅவையின் நலனைக் கருதி எடுக்கப்பட்ட முடிவு - திருத்தந்தையின்
அண்ணன்
பிப்.20,2013. என் தம்பியாகிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும் என்னைப் போல்
வயது கூடிவருவது இயற்கையின் நியதி, எனவே அவர் எடுத்துள்ள முடிவு திருஅவையின் நலனைக் கருதி
எடுக்கப்பட்ட முடிவு என்று திருத்தந்தையின் அண்ணன் பேரருள்தந்தை Georg Ratzinger கூறினார். திருத்தந்தை
தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரது அண்ணன் அருள்தந்தை
Ratzinger, அண்மையில் இஸ்பானிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வயது முதிர்ந்த
காலத்தில் அமைதியைத் தேடுவது மனிதர்களின் இயற்கையே என்று கூறினார். திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் எவ்விதம் மக்களால் நினைவுகூரப்படுவார் என்ற கேள்வி எழுந்தபோது, திருஅவையின்
நம்பிக்கையை ஆழப்படுத்த தன் சக்தியை அதிகம் செலவிட்டவர் தன் தம்பி என்பதை மக்கள் நினைவு
கூருவர் என்று கூறினார் அருள்தந்தை Ratzinger. பொறுப்பிலிருந்து அவர் விலகினாலும்,
தொடர்ந்து தன் எண்ணங்களால் மக்களை இன்னும் அடைந்த வண்ணம் இருப்பார் என்றும் அருள்தந்தை
Ratzinger மேலும் கூறினார்.