2013-02-20 15:54:41

ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் நினைவுச் சின்னத்தில் பிரித்தானிய பிரதமர்


பிப்.20,2013. ஜாலியன்வாலா பாக் (Jallianwala Bagh) படுகொலைகள் பிரித்தானிய வரலாற்றில் அவமானம் மிகுந்த பக்கம் என்றும், இத்தகைய வரலாறு இனி எப்போதும் இடம்பெறக்கூடாது என்றும் பிரித்தானிய பிரதமர் David Cameron கூறினார்.
இந்தியாவில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் Cameron, இப்பயணத்தின் இறுதி நாளான இப்புதனன்று, அமிர்தசரஸ் நகருக்குச் சென்றபோது, படுகொலை நிகழ்ந்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஜாலியன்வாலா பாக் எனுமிடத்தில் கூடியிருந்த மக்கள் மீது ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி படைவீரர்கள் சுட்டதில் பல நூறு பேர் இறந்தனர். இந்தியர்களின் கண்ணோட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்தனர் என்று கூறப்பட்டவேளை, ஆங்கிலேயக் கணக்குப்படி, 379 பேரே இறந்தனர் என்று கூறப்பட்டது.
இந்த படுகொலையைக் குறித்து பல பிரித்தானியப் பிரதமர்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், பிரதமர் Cameron மட்டுமே இவ்விடத்தை பார்வையிட்ட முதல் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.