மியான்மார் இராணுவம், சிறார்ப் படைவீரர்களை விடுதலை செய்திருப்பதற்கு ஐ.நா. பாராட்டு
பிப்.19,2013. மியான்மாரின் தேசிய இராணுவம், 24 சிறார்ப் படைவீரர்களை விடுதலை செய்திருக்கும்
நடவடிக்கையை வரவேற்றுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம். மியான்மாரின் தேசிய இராணுவத்திலுள்ள
சிறார்ப் படைவீரர்களை விடுதலை செய்யவும், அவர்களை மீண்டும் சமுதாயத்தோடு இணைக்கவும்,
எதிர்காலத்தில் சிறார்ப் படைவீரர்களைப் படையில் சேர்க்காதிருக்கவுமான செயல்திட்டம் ஒன்றில்,
ஐ.நா.வும், மியான்மார் அரசும் கடந்த ஜூனில் கையெழுத்திட்டன. மியான்மார் அரசு, இந்தச்
செயல்திட்டத்தின்படி தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனம், சிறார்
உரிமைகளை அதிகமாக மீறும் 14 நாடுகளில் மியான்மாரும் ஒன்று எனக் கூறியுள்ளது.