2013-02-16 15:12:01

திருத்தந்தை பாப்பிறைப் பதவியை, அதிகாரமாகப் பார்க்காமல் அதை ஒரு மறைப்பணியாகவே நோக்கி வந்தார், அருள்தந்தை லொம்பார்தி


பிப்.16,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தான் வகித்துவந்த பாப்பிறைப் பதவியை, அதிகாரமாகப் பார்க்காமல் அதை ஒரு மறைப்பணியாகவே நோக்கி வந்தார் என்று திருப்பீடச் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
திருத்தந்தை தனது பாப்பிறைப் பணியைத் தொடங்கியபோது, ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் ஒரு தாழ்மையான பணியாள் என்று தன்னை அவர் விவரித்தது போலித் தாழ்ச்சி அல்ல என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, வயதான காலத்தில் எதிர்பாராதவிதமாகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பெரும்பணியை நன்றாகச் செய்வதற்கு நல்ல உடல்நலம் தேவை என்பதை திருத்தந்தை உணர்ந்திருந்தார் என்றும் கூறினார்.
இம்மாதம் 28ம் தேதியோடு பதவி விலகுவதாகத் திருத்தந்தை அறிவித்திருப்பது, விடுதலை உணர்வில் நம்பிக்கை வைக்கும் மற்றும் கடவுளின் பிரசன்னத்தில் வாழும் ஒரு மனிதரின் வியக்கத்தக்க மனித மற்றும் கிறிஸ்தவ ஞானச் செயல்களில் ஒன்று என்றும் கூறினார் அவர்.
திருஅவையும் உலகும் இன்று எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் திருத்தந்தை பதவி விலகுகிறார் என்று சிலர் நினைப்பதுபோல் அல்ல, மாறாக, முழுவதும் பாராட்டுக்குரிய இத்தகைய தீர்மானத்தை எடுப்பதற்கு மிகுந்த சக்தி தேவை என்றும் அவர் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த இக்கட்டான காலத்தில் நம்மைக் கைவிடவில்லை, ஆனால், திருஅவை தன்னையும், பேதுருவின் புதிய வழித்தோன்றலையும் நம்பிக்கையோடு தூயஆவியிடம் அர்ப்பணிக்குமாறு திருத்தந்தை நமக்கு அழைப்பு விடுக்கின்றார் என்று கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.







All the contents on this site are copyrighted ©.