திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு இந்தியத் திருஅவையின் ஆழ்ந்த நன்றி
பிப்.15,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு இந்தியத் திருஅவை தனது ஆழ்ந்த
நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, இந்தியா முழுவதிலும் இருக்கின்ற கிறிஸ்தவர்கள், தூய பேதுருவின்
தலைமைப்பீட விழாவான இம்மாதம் 22ம் தேதியை திருத்தந்தைக்குரிய நாளாகச் செலவழிப்பார்கள்
என்று இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அறிவித்துள்ளார். திருத்தந்தை
16ம் பெனடிக்ட், தனது எட்டு ஆண்டுகாலப் பாப்பிறைப் பணியில், ஆசியாவுக்கும் இந்தியாவுக்கும்
நெருக்கமான பல விவகாரங்களைப் பல்வேறு தருணங்களிலும் பல்வேறு வழிகளிலும் பேசியிருக்கிறார்
என்று, மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் கூறியுள்ளார். திருத்தந்தை தனது அப்போஸ்தலிக்க
மடல்கள் மூலம் மட்டுமல்லாமல், தனது அறிவுத் தெளிவு மற்றும் படிப்புத் திறமையைக் கொண்டும்
ஆசிய உலகில் பேசியிருக்கிறார் என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ், ஆசியா, உலகில் அதிகமான
முஸ்லீம்களைக் கொண்டுள்ளவேளை, அவர் முஸ்லீம்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்தது,
உண்மையிலேயே முக்கியமான சவாலாக இருந்தது என்றும் கூறினார். 2011, 2012ம் ஆண்டுகளின்
அனைத்துலக கத்தோலிக்க அமைதி தினச் செய்திகளும் சமய சுதந்திரம் மற்றும் அமைதியைப் பற்றியே
இருந்தன என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ், நீதியும் அமைதியும் உலகளாவிய அனுபவம், இவை,
பேராசை, சமத்துவமின்மை, வன்முறை ஆகியவற்றின் தனிப்பட்ட மற்றும் அமைப்புமுறையான தீமைகளுக்கு
எதிராக இருக்கின்றன என்றும் கூறினார்.