திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்ட செயலர் திருத்தந்தையுடன் காஸ்தெல் கந்தோல்ஃபோ
செல்வார்
பிப்.15,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்ட செயலர் பேராயர் Georg
Ganswein உட்பட வத்திக்கானில் திருத்தந்தைக்கு உதவி செய்துவரும் பணியாளர்கள் இம்மாதம்
28ம் தேதி மாலை திருத்தந்தையுடன் காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார்கள் என்று நிருபர் கூட்டத்தில்
அறிவித்தார் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி. வத்திக்கான் தோட்டத்திலுள்ள Mater Ecclesiae
அடைபட்ட துறவு இல்லம் சீரமைக்கப்பட்ட பின்னர் திருத்தந்தை அங்கு வந்து தங்கும்போது பேராயர்
Gansweinம் திருத்தந்தையுடன் தங்குவார் என்றும், அதேசமயம் வத்திக்கானின் பாப்பிறை இல்ல
நிர்வாகத் தலைவராகப் புதிய திருத்தந்தைக்கும் அவர் பணி செய்வார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி
கூறினார். திருத்தந்தைக்குத் தற்போது உதவி செய்துவரும் Memores Domini என்ற அர்ப்பணிக்கப்பட்ட
பொதுநிலை சகோதரிகள் கழகத்தைச் சார்ந்த சகோதரிகளும் காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார்கள் என்றும்
அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார். திருஅவை வரலாற்றில் 600 ஆண்டுகளுக்குப் பின்னர்
தற்போது திருத்தந்தை ஒருவர் பதவி விலகலை அறிவித்திருப்பதால் இது சார்ந்த நடைமுறை பிரச்சனைகளுக்குத்
தெளிவும் விளக்கமும் அளிக்கும் பணியில் கர்தினால்கள் அவையும், திருஅவை சட்ட வல்லுனர்களும்,
பிற வத்திக்கான் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். கான்கிளேவ்
என்ற திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் கூட்டம் வருகிற மார்ச் 15க்கும்
20க்கும் இடைப்பட்ட நாள்களில் நடைபெறும் எனவும் நிருபர்களிடம் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.