I.O.R நிறுவனத்தின் புதிய தலைவர் வழக்கறிஞர் Ernst von Freyberg
பிப்.15,2013. I.O.R என்ற திருப்பீடச் சமயப் பணிகள் நிறுவனத்தின் மேற்பார்வைக் குழுவின்
புதிய தலைவராக, வழக்கறிஞர் Ernst Freiherr von Freyberg என்பவரை, I.O.R நிறுவனத்தின்
கர்தினால்கள் குழு இவ்வெள்ளியன்று நியமித்துள்ளது. வத்திக்கான் வங்கி என பரவலாக
அழைக்கப்படும் I.O.R. நிறுவனத்தின் மேற்பார்வை குழுவிலுள்ள மற்ற நால்வரும் தங்கள் பணிகளைத்
தொடர்ந்து செய்வார்கள் என்று கர்தினால்கள் குழு கூறியது. I.O.R. நிறுவனத்தின் புதிய
தலைவர் நியமனம் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன, திருப்பீடச் பேச்சாளர்
இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, இத்தலைவர் பதவிக்கென பரிந்துரைக்கப்பட்ட
பலரின் தொழில் மற்றும் அறநெறி வாழ்வைப் பல மாதங்களாகப் பரிசீலித்த பின்னர், Ernst von
Freyberg நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். 1958ம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்த
Ernst von Freyberg, Knights of Malta பிறரன்பு அமைப்பில் ஆர்வமுடன் செயல்படுபவர். வழக்கறிஞராகிய
இவர், இன்னும் பல முக்கிய பதவிகளைக் கொண்டிருப்பவர்.