கர்தினால் Filoniயின் இந்திய மேய்ப்புப்பணி பயணத்தில்...
பிப்.14,2013. புதியதொரு முயற்சி எதுவுமே ஆர்வத்தையும், சக்தியையும் தருகின்றது; இந்த
ஆர்வமும், சக்தியும் மேய்ப்புப்பணியில் செயல்பாடுகளாக மாறவேண்டும் என்று வத்திக்கான்
உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பிப்ரவரி 9ம் தேதி முதல் எட்டு நாட்களாய் இந்தியாவில்
மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ள நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால்
Fernando Filoni, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் கடந்த மேமாதம் உருவாக்கப்பட்ட
பரிதாபாத் என்ற புதிய சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தின் பங்குதளம் ஒன்றை, இவ்வியாழன்
மாலை துவக்கிவைத்தபோது இவ்வாறு கூறினார். திருத்தூதர் புனித தோமா இந்தியாவுக்கு வருகை
தந்த காலத்திலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்தை மேற்கொண்டுள்ள சீரோ மலபார் ரீதி திருஅவையின்
பாரம்பரியத்தைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Filoni, திருத்தூதர்களின் ஆர்வம் இன்றும்
நம்மைத் தூண்டும் சக்தியாக விளங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புதிய பங்குக்
கோவிலின் அடித்தளம் நாட்டப்படும் நேரத்தில், நாம் ஒவ்வொருவரும் வாழும் கோவில்கள் என்பதையும்
இவ்விழா நமக்கு நினைவுபடுத்துகிறது என்று எடுத்துரைத்தார் கர்தினால் Filoni.