2013-02-12 16:17:31

மும்பை கர்தினால் : திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு கேட்டு அதிர்ச்சி, கவலை


பிப்.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது பதவி விலகலை அறிவித்ததைக் கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாக, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
திருத்தந்தை தனது பதவி விலகலுக்குக் கொடுத்திருக்கும் காரணம், அவர் திருஅவை மீது கொண்டிருக்கும் அன்பைத் தெளிவாகக் காட்டுகின்றது என்று, கர்தினால் கிரேசியஸ் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
கடந்த 600 ஆண்டுகளில் நடந்திராத ஒன்றை திருத்தந்தை செய்திருப்பது அவரின் துணிச்சலையே காட்டுகின்றது என்றும், அவர் ஒரு திறமையான இறையியல் வல்லுனர், அவரது ஒவ்வோர் உரையும் புதிய உள்தூண்டுதல்களைக் கொடுத்துள்ளன என்றும் கர்தினால் கிரேசியஸ் கூறியுள்ளார்.
சமய மற்றும் உலக விவகாரங்களில் தெளிவான எண்ணத்தைக் கொண்டிருப்பவர் என்றும், விசுவாசம், அறநெறி சார்ந்த விவகாரங்களில் உண்மையைப் பேசுவதில் அஞ்சாதவர் மற்றும் துணிச்சலானவர் என்றும், இந்நவீன காலத்தில் மாபெரும் ஆன்மீகத் தலைவர் என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பாராட்டியுள்ளார் மும்பை கர்தினால் கிரேசியஸ்.







All the contents on this site are copyrighted ©.