பிப்.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பல்சமய உரையாடலுக்கும், அனைத்துலக அமைதிக்கும்
தன்னை அர்ப்பணித்திருந்தவர் என ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் பாராட்டியுள்ளார். திருத்தந்தை
16ம் பெனடிக்ட், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் பொறுப்பிலிருந்து இம்மாத இறுதியில்
விலகும் செய்தி குறித்த தனது கருத்தை வெளியிட்ட பான் கி மூன், 2008ம் ஆண்டு ஏப்ரலில்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஐ.நா. தலைமையகத்துக்குச் சென்று உரையாற்றியதை நினைவுகூர்ந்துள்ளார். நாடுகள்
மற்றும் சமூகங்கள் மத்தியில் நிலவும் சமத்துவமின்மையை நீக்கவும், சமூகப் பாதுகாப்பை அதிகரிக்கவும்
முக்கிய யுக்தியாக இருப்பது மனித உரிமைகளை ஊக்குவிப்பதே என, திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
ஐ.நா.வில் உரையாற்றியதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார் பான் கி மூன்.