பாப்பிறை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு திருத்தந்தை அறிக்கை
பிப்.11,2013. இம்மாதம் 28ம் தேதியிலிருந்து பாப்பிறை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான
விருப்பத்தைத் தெரிவித்து இத்திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய
பணிகளைச் சரியாக ஏற்று நடத்தமுடியாத நிலையில் இம்முடிவைத் தான் எடுத்துள்ளதாகக் கூறியுள்ள
பாப்பிறை, 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட
இப்பொறுப்பிலிருந்து இம்மாதம் 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பணிஓய்வு பெறுவதாக
அவ்வறிக்கையில் கூறியுள்ளார். அதன்பின் கர்தினால்கள் அவை கூடி புதிய திருத்தந்தையைத்
தேர்ந்தடுக்கும் எனவும் அதில் தெரிவித்துள்ளார் பாப்பிறை. இந்தப் பாப்பிறை பணியின்போது
தன்மீது காட்டப்பட்ட அன்பிற்கு நன்றி கூறுவதாகவும், குறைபாடுகளுக்காக மன்னிப்பை வேண்டுவதாகவும்
மேலும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பாப்பிறை. தன் இறுதிக் காலத்தில், செபத்திற்கு
அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்வு மூலம் திருஅவைக்குச் சேவையாற்ற உள்ளதாகவும், தனது செய்தியின்
இறுதியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.