'பேதுருவின் பாதை' என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெறும் கண்காட்சி
பிப்.06,2013. விசுவாசம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் அர்ப்பணம் மட்டுமல்ல,
மாறாக கடவுளைத் தேடும் அனைவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்டுள்ள ஓர் ஆவல் என்று வத்திக்கான்
உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பிப்ரவரி 7, இவ்வியாழன் முதல், மே மாதம் முதல் தேதி
முடிய உரோம் நகரின் Castel Sant'Angelo என்ற நினைவு மண்டபத்தில், 'பேதுருவின் பாதை' என்ற
தலைப்பில் நடைபெறும் ஒரு கண்காட்சியைக் குறித்து, புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட
அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella, செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்விதம் கூறினார். நம்பிக்கை
ஆண்டின் ஒரு முக்கிய முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் நான்காம் நூற்றாண்டிலிருந்து
20ம் நூற்றாண்டு முடிய ஒவ்வொரு நூற்றாண்டிலும் பாதுகாக்கப்பட்டுள்ள பல கலைப் பொருட்களும்,
ஆவணங்களும் இடம்பெறுகின்றன. ஒன்பது நாடுகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தக்
கண்காட்சி, அனைத்து வயதினரையும் ஈர்க்கும்வண்ணம் அமைந்துள்ளதென்று பேராயர் Fisichella
கூறினார். கலைநயம் மிக்க இந்தக் கண்காட்சி, உண்மை அழகு கடந்துசெல்லக் கூடியது அல்ல
என்பதை நமக்கு நினைவுறுத்தும் என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.