காடுகளின் பயனை உணராத பல நாடுகளின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது - ஐ.நா.
உயர் அதிகாரி
பிப்.06,2013. காடுகளைப் பேணி வளர்ப்பது பல குழுமங்களுக்கும், தொழில்களுக்கும் உறுதுணையாக
இருக்கும் என்பதை உலகின் பல நாடுகள் இன்னும் உணரவில்லை என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர்
கூறினார். காடுகளின் பயனை உணராத பல அரசுகள், காடுகளை அழிக்கும் வகையில் சட்டங்கள்
இயற்றுவதால் அந்நாட்டின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் உணவு
மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் (FAO) இயக்குனர்களில் ஒருவரான Eduardo Mansur கூறினார். FAO
இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் காடுகளைக் காக்கும் பத்து கூடுதலான வழிகள்
கூறப்பட்டுள்ளன. மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பயன்படும் எரிபொருள், உணவு, மரங்கள்,
போன்ற பொருட்களும், அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் காபி, தேநீர், இரப்பர் போன்ற பொருட்களும்
இன்னும் சிறந்த முறையில் கிடைக்க, காடுகளைப் பாதுகாப்பது அவசியம் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.