பிப்.04,2013. புற்றுநோயால் உலகில் ஆண்டுதோறும் 76 இலட்சம் பேர் இறப்பதாகவும், இது உலகில்,
ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்பில் 13 விழுக்காடு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால்
இறப்பவர்களில் 70 விழுக்காடு பேர், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்
எனத் தெரிவிக்கும் உலக நலவாழ்வு நிறுவனம், துவக்கத்திலேயே முறையான சிகிச்சை மேறகொண்டால்,
40 விழுக்காடு வரை இறப்புகளைத் தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கிறது. இந்தியாவில்,
புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால், புற்றுநோய் பாதிப்பாளர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புற்றுநோயால்
பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்
எனக்கூறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புற்றுநோய் ஆய்வுக் கழக மருத்துவ இயக்குனர் ஆஷிஷ்
முகோபாத்யாயா, மேற்கு வங்கத்தில் மட்டும் 5 இலட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
ஆண்டுக்கு 70,000 புற்றுநோய் பாதிப்புக்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், ஆண்டுதோறும் 35,000
பேர் புற்றுநோயால் உயிரிழந்து வருவதாகவும் தெரிவித்தார்.