திருப்பீட பத்திரிகை அலுவலக இயக்குனர் : பிறரன்பை இன்னும் ஆழமாக வாழ அழைப்பு
பிப்.02,2013. விசுவாசமின்றி பிறரன்பு இல்லை, பிறரன்பு இன்றி விசுவாசம் இல்லை என்பதால்,
இந்த நம்பிக்கை ஆண்டில், இவையிரண்டுக்கும் இடையே உள்ள உறவை நாம் இன்னும் மிக ஆழமாக வாழ
வேண்டுமென இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கேட்டுள்ளார். சனவரி 27ம் தேதியன்று
கடைப்பிடிக்கப்பட்ட உலகத் தொழுநோயாளர் தினம், இம்மாதம் 11ம் தேதி கடைப்பிடிக்கப்படும்
உலக நோயாளர் தினம், இம்மாதம் 13ம் தேதியன்று தொடங்கும் தவக்காலம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப்
பேசியுள்ள திருப்பீட பத்திரிகை அலுவலக இயக்குனர் அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு கேட்டுள்ளார்.
முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா, புனித தமியான், புனித வின்சென்ட் தெ பவுல் உட்பட
பல புனிதர்கள் இறையன்பில் நம்பிக்கை வைத்து பிறரன்பை வாழ்ந்த விதம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை ஆண்டு வருகிற நவம்பர் 24ம் தேதியன்று
நிறைவடையும்.