பிப்.01,2013. அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினமான இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான்
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினத்தன்று, ஆயிரக்கணக்கான இருபால் துறவியருடன் சேர்ந்து
வத்திக்கான் பசிலிக்காவில் வழக்கமாக மாலை திருப்புகழ்மாலை செபிக்கும் திருத்தந்தை, இந்த
நம்பிக்கை ஆண்டில் திருப்பலி நிகழ்த்தவுள்ளார். துறவற வாழ்வின் பல்வேறு பணிகள் மற்றும்
அதன் உலகளாவிய தன்மையைக் குறிக்கும் விதமாக, இத்திருப்பலிக்கு முன்னர், பல துறவு சபைகளைச்
சேர்ந்த 50 இருபால் துறவியர் எரியும் மெழுகுதிரிகளுடன் பவனியாகச் செல்வார்கள். குழந்தை
இயேசு எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவான பிப்ரவரி 2ம் தேதியன்று
அனைத்துலக துறவிகள் தினம் சிறப்பிக்கப்படுகின்றது. இத்தினம் 1997ம் ஆண்டில் முத்திப்பேறு
பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்டது.