நம்பிக்கை ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து அம்சங்கள் - இந்தியத் திருஅவை
சன.31,2013. நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில், இவ்வுலக செல்வங்களின் மீது கொள்ளும் பற்றிலிருந்து
விடுபட்டு, சமுதாய நீதிக்கு தங்களையே அர்ப்பணமாக்க ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளனர்
என்று இந்தியத் திருஅவை கூறியுள்ளது. சனவரி 29, இச்செவ்வாயன்று மங்களூர் ஆயர் Aloysius
Paul D'Souza தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நம்பிக்கை ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய
பத்து அம்சங்கள் வெளியிடப்பட்டன. ஆசிய ஆயர்கள் பேரவையின் மனிதவள மேம்பாட்டுப் பணிக்குழுவின்
பொதுச் செயலர் அருள்தந்தை நித்திய சகாயம் முன்னின்று நடத்திய இக்கூட்டத்தில், நம்பிக்கை
ஆண்டில் ஒவ்வொரு மறைமாவட்டமும் கடைபிடிக்கக்கூடிய பத்து அம்சங்கள் வெளியிடப்பட்டன. குழந்தைகளுக்கும்,
இளையோருக்கும் நமது விசுவாசப் பாரம்பரியத்தைச் சொல்லித் தருதல், குடும்பம், இளையோர்,
வயது முதிர்ந்தோர் மத்தியில் பணிபுரிய 'நம்பிக்கை அணிகளை' உருவாக்குதல், தேவையில் இருப்போருடன்
ஒருமைப்பாட்டை வளர்த்தல், நெருங்கி வரும் தவக்காலத்தில் ஒப்புரவை வளர்க்கும் வழிகளைத்
தேடுதல் என்பன உட்பட்ட பத்து அம்சங்கள் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டன.