தேவநிந்தனை சட்டத்தின் கீழ்18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த
Barkat Masihவிடுதலை
சன.30,2013. பாகிஸ்தானில், தேவநிந்தனை சட்டத்தின் கீழ் தவறாக கைது செய்யப்பட்ட Rimsha
Masih என்ற சிறுமி அண்மையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, இதே சட்டத்தின்கீழ் 18 மாதங்கள்
சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih என்பவரும் இச்செவ்வாயன்று விடுவிக்கப்பட்டார். பஞ்சாப்
மாநிலத்தைச் சேர்ந்த 56 வயதான Barkat Masih, ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும்,
கிறிஸ்தவ மறைக்கு மாறியவர். இவர் 2011ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தேவநிந்தனை சட்டத்தின்
கீழ் கைது செய்யப்பட்டார். 2009ம் ஆண்டு ஜூன் மாதம் தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பிபி என்ற 46 வயது பெண்ணும், Rimsha Masih, Barkat Masih
ஆகிய இருவரின் விடுதலையை அடுத்து விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம்
எதிர்பார்க்கிறது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரை அச்சத்தில் வாழவைக்கும் தேவநிந்தனை
சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பன்னாட்டு அரசுகளிடமிருந்து பாகிஸ்தான்
அரசுக்குத் தொடர்ந்து விண்ணப்பங்கள் எழுந்து வருகின்றன.