புனித பூமியில் இரண்டு நாடுகள் தீர்வுக்கு அமெரிக்க ஐக்கிய நாடு ஆதரவு வழங்க அழைப்பு
சன.29,2013. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களுக்கானத் தீர்வில்,
“இரண்டு நாடுகள்” என்ற அமைதி ஒப்பந்தம் கொண்டுவரப்படுவதற்காக உழைக்குமாறு அமெரிக்க ஐக்கிய
நாட்டு அரசுத்தலைவர் ஒபாமா நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள். அமெரிக்க
ஐக்கிய நாட்டின் கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் யூத மதங்களைச் சார்ந்த 30 குழுக்களின் தலைவர்கள்
கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல்-பாலஸ்தீனிய அமைதி ஒப்பந்தத்திற்கானத்
துணிச்சலான புதிய முயற்சிகளுக்கு, 2013ம் ஆண்டின் புதிய நிர்வாகத்தில் உடனடியாக முன்னுரிமை
கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு
இடையே அமைதிக்கான தீர்வுக்குரிய வாய்ப்பு நலிந்து வருவதாகவும், தற்போதைய தேக்கநிலை, இவ்விரு
தரப்புகளும் புறக்கணிக்கப்படத் தூண்டப்படக்கூடும் எனவும் அமெரிக்கப் பல்சமயத் தலைவர்களின்
அறிக்கை எச்சரிக்கின்றது. இரண்டு நாடுகள் தீர்வே, அப்பகுதியில் இடம்பெறும் மோதல்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் உண்மையான ஒரே தீர்வு என்றும் அத்தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.