ஆசியாவில் கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுவது குறித்து கர்தினால் பஞ்ஞாஸ்கோ
சன.29,2013. ஆசியாவிலும், ஏன் உலகெங்கிலும் கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுவது, அகில உலகத்
திருஅவையில் கலக்கத்தை உருவாக்கியுள்ளது என்று, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவரான ஜெனோவா
பேராயர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ கூறினார். உரோம் நகரில் இடம்பெற்றுவரும் இத்தாலிய
ஆயர் பேரவையின் நிலைத்த அவைக் கூட்டத்தில் இவ்வாறு கவலை தெரிவித்த கர்தினால் பஞ்ஞாஸ்கோ,
உலகெங்கும் பல கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் 2012ம்
ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்று வல்லுனர்கள் கூறுவதையும் சுட்டிக்காட்டினார். இவ்வெண்ணிக்கைத்
திகிலூட்டுவதாக இருக்கின்றது என்றும், பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காகவும்
கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இத்தாலிய ஆயர்கள் கூட்டத்தில்,
அந்நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வின் நிலைமைகள் குறித்து வழக்கமாக எடுத்துரைக்கும்
கர்தினால் பஞ்ஞாஸ்கோ, தற்போதைய கூட்டத்தில் ஆசியாவிலும் வட ஆப்ரிக்காவிலும் கிறிஸ்தவர்களுக்கு
எதிராக இடம்பெறும் சகிப்பற்றதன்மை குறித்தும் பேசினார்