மும்பை உயர்மறைமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த ஒளிச்சுடர் ஊர்வலம்.
சன.28,2013. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே
ஏற்படுத்தும் விதமாக மும்பை உயர்மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்குத் தளங்களிலும் ஞாயிறன்று
3 கோடியே 70 இலட்சம் ஒளிச்சுடர்களைத் தாங்கி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர் கிறிஸ்தவர்கள். பாலின
அடிப்படையிலான கருக்கலைத்தல்கள், பெண் சிசுக்கொலை, வரதட்சணை தொடர்புடைய மரணங்கள், கற்பழிப்புகள்,
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு போன்றவை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதாக
இவ்வூர்வலம் அமைந்தது. இந்தியாவின் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில்
ஆண்களைவிட 3 கோடியே 70 இலட்சம் பெண்கள் குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,
இவ்வெண்ணிக்கையுடைய ஒளிச்சுடர்களைத் தாங்கி மும்பை உயர்மறைமாவட்டத்தில் ஊர்வலம் நடத்தப்பட்டது.