பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் முயற்சிகள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தாக அமைகின்றன
- Greenpeace இயக்கத்தின் தலைவர்
சன.23,2013. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்று உலகின் வல்லரசுகள் வெளிப்படையாகக்
கூறி வந்தாலும், அவ்வரசுகள் பன்னாட்டு நிறுவனங்களின் பல பெரும் முயற்சிகளுக்கு அனுமதி
அளிப்பது, சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தாக அமைகின்றது என்று அகில உலக Greenpeace
இயக்கத்தின் தலைவர் Kumi Naidoo கூறினார். கடந்த ஆண்டில் பன்னாட்டு நிறுவனங்களால்
மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளைப் பற்றிய அறிக்கையொன்று "Point of no return" அதாவது,
'மீளமுடியாத நிலை' என்ற தலைப்பில் Greenpeace அமைப்பால் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா,
சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா ஆகிய நாடுகள் அனுமதி தந்துள்ள 14 பெரும் தொழில் முயற்சிகளால்
உலகின் சுற்றுச் சூழலுக்குப் பெரும் ஆபத்து உருவாகும் என்று இவ்வறிக்கை கூறுகிறது. இந்த
14 தொழில் முயற்சிகளால் மட்டுமே, 2020ம் ஆண்டிற்குள், 634 கோடி டன் எடையுள்ள கரியமல வாயு
(CO2) உலகில் அதிகரிக்கும் என்று இவ்வறிக்கை எச்சரிக்கிறது.