சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இன்று ஒருவரின்
சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் சாதி,
தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்பினடிப்படையில் மாற்றம் பெற்றது. இந்தியாவில்
3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள்
பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்பினடிப்படையில்
சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன. தமிழ்நாடு சாதிகள் பட்டியலை
நோக்கினோமென்றால் 7 பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதன் கீழ் சாதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர்
பட்டியலில் 76. சாதிகளும், பழங்குடியினர் பட்டியலில் 36ம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
பட்டியலில் 136ம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்-இஸ்லாமியர் என்பதில் 7ம், மிகவும்
பிற்பட்ட வகுப்பினரில் 40ம், சீர்மரபினர் பட்டியலில் 68ம், முற்பட்ட வகுப்பினர் பட்டியலில்
79ம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சாதி ஆதிக்கம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை
நீதிபதியும் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ள கருத்து
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ‘நாட்டில் 90% பேர் சாதி அடிப்படையில் வாக்களிக்கும்
போக்கு இருப்பது கவலை அளிக்கிறது’ என்கிறார் அவர்.