ஐ.நா.: அப்கானிஸ்தான் சிறைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவது பரவலாக உள்ளது
சன.21,2013. அப்கானிஸ்தான் சிறைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவது பரவலாகக் காணப்படுவதாக
ஐ.நா. நிறுவனம் தன் அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா.வின் புலன் விசாரணை அதிகாரிகள்
ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 635 போர்க்கைதிகளிடம் நடத்திய விசாரணையில், பாதிக்கும் மேற்பட்டோர்
தாங்கள் சிறைக்குள் சித்ரவதைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அடித்துத் துன்புறுத்தல்,
பாலியல் முறையில் தவறாக நடத்தப்படல், கொலைசெய்வதாக அச்சுறுத்தல் உட்பட 14 வழிகளில் கைதிகள்
துன்புறுத்தப்படுவதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளைச் சித்ரவதைகளுக்கு
உள்ளாக்கும் அதிகாரிகள் எவ்விதத் தண்டனைகளும் இன்றி தப்பி வருவதாகவும், துன்புறுத்திப்
பெறப்படும் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் ஐ.நா.வின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.